கோலாலம்பூர்
ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆசிய அளவிலான தகுதி சுற்று கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங், ஜப்பானின் அகாரி மிடோகிகாவாவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அனஹத் சிங் 11-1, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அரை இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளள அனஹத் சிங், 8-வது இடத்தில் உள்ள ஹாங் காங்கனி ஹெலன் டாங்குடன் மோதுகிறார். ஹெலன் டாங் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் தன்வி கன்னாவை 11-5, 11-6, 10-12, 11-9 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ரானி, மலேசியாவின் முகமது சியாபிக் கமாலுடன் மோதினார். இதில் வீர் சோட்ரானி 9-11, 11-6, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தத் தொடரில் வெற்றி பெறுபவர்கள் வரும் மே 9 முதல் 17-ம் தேதி வரை சிக்காகோவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.