கவுலூன்
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டம் ஹாங்காங்கில் உள்ள கவுலூன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, ஹாங்காங்குடன் மோதியது. இதில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தின் 4-வது நிமிடத்தில் இந்திய அணியின் கோல் கீப்பரான விஷால் கைத், தனது இடத்தில் இருந்து முன்னேறி பாக்ஸ் பகுதிக்கு வெளியே வந்து பந்தை தடுக்க முயன்றார்.
அப்போது ஹாங்காங் அணியின் வீரர் மைக்கேல் உதேபுலுசோரை தாக்கினார். இதனால் விதிமுறையை மீறி செயல்பட்டதாக பெனால்டி வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி ஸ்டீபன் பெரேரா கோல் அடிக்க ஹாங்காங் அணி வெற்றி பெற்றது.