செஸ்டர் லீ ஸ்டீரிட்
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி அசத்தினார். பந்து வீச்சில் கிரந்தி சர்மா 6 விக்கெட்களை வேட்டையாடி அசத்தினார்.

செஸ்டர் லீ ஸ்டீரிட்டில் நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 84 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் விளாசினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 45 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 45, ஹர்லின் தியோல் 45, பிரதிகா ராவல் 26, ரிச்சா கோஷ் 38 ரன்கள் சேர்த்தனர்.

319 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 49.5 ஓவர்களில் 305 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் நேட் ஷிவர் பிரன்ட் 105 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 98 ரன்களும், எம்மா லம்ப் 81 பந்துகளில், 68 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் கிரந்தி சர்மா 9.5 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 52 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 3 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. ஆட்ட நாயகியாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வானார்.

