ind_1

இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம்

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த இந்திய அணி இஷான் கிஷனின் அதிரடியால் 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

இஷான் கிஷன் 40 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காத நிலையில் சல்மான் அலி ஆகா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

திலக் வர்மா 24 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயூப் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஹர்திக் பாண்டியா (0) தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆஃப் திசையில் பாபர் அஸிடம் கேட்ச் ஆனது.

ishan 1

சைம் அயூப் அடுத்தடுத்து கைப்பற்றிய இந்த 2 விக்கெட்களால் இந்திய அணிக்கு அழுத்தம் உருவானது.

நிதானமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் தாரிக் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஷாகின் ஷா அப்ரிடி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை ஷிவம் துபே பவுண்டரிக்கு விரட்டினார். இதே ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த ரிங்கு சிங், அடுத்த பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அடுத்த பந்தில் 2 ரன்கள் சேர்க்க முயன்ற போது ஷிவம் துபே ரன் அவுட் ஆனார்.

ஷிவம் துபே 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சேர்த்தார். ஆட்டத்தின் கடைசி பந்தில் அக்சர் பேடல் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் அணி தரப்பில் சைம் அயூப் 3 விக்கெட்களை வீழ்த்தினார். சல்மான் அலி ஆகா, ஷாகின் ஷா அப்ரிடி, உஸ்மான் தாரிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

176 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. சாகிப்சாதா 0 ரன்னில் ஹர்திக் பாண்டியா பந்தில் நடையை கட்டினார்.

ஜஸ்பிரீத் பும்ரா வீசிய அடுத்த ஓவரில் சைம் அயூப் 6, சல்மான் அலி ஆகா 4 ரன்களில் வெளியேறினர். 13 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்த பாகிஸ்தான் அணியால் அதன் பின்னர் மீள முடியவில்லை.

பாபர் அஸம் 5 ரன்களில் அக்சர் படேல் பந்தில் போல்டானார். சற்று தாக்குப்பிடித்து அதிரடியாக விளையாட முயன்ற உஸ்மான் கான் 34 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் படேல் பந்தில் ஸ்டெம்பிங்க் ஆனார்.

இதைத் தொடர்ந்து முகமது நவாஷ் 4 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். இதன் பின்னர் ஷதப் கான் 14 ரன்களில் திலக் வர்மா பந்தில் ஆட்டமிழந்தார். வருண் சக்ரவர்த்தி வீசிய 16-வது ஓவரில் ஃபஹீம் அஷ்ஃரப் (10), அப்ரார் அகமது (0) ஆகியோர் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர்.

கடைசி வீரராக உஸ்மான் தாரிக் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் போல்டானார். முடிவில் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷாகின் ஷா அப்ரிடி 19 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். குல்தீப் யாதவ், திலக் வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

அதேவேளையில் பாகிஸ்தான் அணிக்கு இது நடப்பு தொடரில் முதல் தோல்வியாக அமைந்ததது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று -0.403 நிகர ரன் விகிதத்துடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் தனது கடைசி ஆட்டத்தில் நமீபியாவை வீழ்த்த வேண்டும். இந்த ஆட்டம் வரும் 18-ம் தேதி கொழும்பு நகரில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top