axar 30

அஷுதோஷ் இருந்திருந்தால் கதையே வேறு…. அக்சர் படேல் !

புதுடெல்லி

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 29) டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. அங்ரிஷ் ரகுவன்ஷி 44, ரிங்கு சிங் 36, சுனில் நரேன் 27, ரஹ்மனுல்லா குர்பாஸ் 26, அஜிங்க்ய ரஹானே 26, ஆந்த்ரே ரஸ்ஸல் 17 ரன்கள் சேர்த்தனர்.

205 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக டூ பிளெஸ்ஸிஸ் 45 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசினார்.

கேப்டன் அக்சர் படேல் 23 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், விப்ராஜ் நிகாம் 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்களும் சேர்த்தனர். அபிஷேக் போரெல் 4, கருண் நாயர் 15, கே.எல்.ராகுல் 7 ரன்களில் நடையை கட்டினர்.

vipraj

கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரேன் 4 ஓவர்களை வீசி 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். கொல்கத்தா அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் தொடர்கிறது.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. ஆட்ட நாயகனாக சுனில் நரேன் தேர்வானார்.

டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் 3-வது தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள டெல்லி அணி 4 தோல்வி, 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 57 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம் களத்தில் இருந்தனர். ஹர்ஷித் ராணா வீசிய 17-வது ஓவரில் இந்த ஜோடி 11 ரன்கள் விளாசியது.

ஆனால் வருண் சக்ரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் அஷுதோஷ் சர்மா (7) ஆட்டமிழந்தார். இது டெல்லி அணிக்கு பின்னடைவை கொடுத்தது. இதன் பின்னர் விப்ராஜ் நிகாம் போராடினார். ஆனால் அவரால் அணியை வெற்றிக் கோட்டை கடக்க வைக்க முடியாமல் போனது.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறும்போது, “பந்துவீச்சின் போது பவர்பிளேயில் நாங்கள் 15-20 ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்தோம். அதேவேளையில் பேட்டிங்கின் போது சில விக்கெட்டுகளையும் இலகுவான முறையில் இழந்தோம்.

பவர்பிளேவுக்குப் பிறகு பேட்டிங்கிற்கு வந்த நாங்கள் அவர்களை எப்படி கட்டுப்படுத்தினோம் என்பதுதான் பாசிட்டிவ். பவர்பிளேவுக்கு பிறகு கொல்கத்தா அணியை கட்டுப்படுத்திய விதம் நேர்மறையானது. சில பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட தவறினாலும், எங்களில் 2-3 பேர் பங்களித்து ஆட்டத்தை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றோம்.

விப்ராஜ் பேட்டிங் செய்யும் போது நம்பிக்கை இருந்தது. அஷுதோஷ் சர்மா களத்தில் இருந்திருந்தால் முதல் போட்டியை போன்று ஆட்டத்தை வென்றிருக்க முடியும். பயிற்சி ஆடுகளத்தில் டைவ் அடித்தபோது என் தோல் உரிந்தது. ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், 3-4 நாட்கள் இடைவெளி உள்ளது. இதனால் நான் குணமடைய முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top