துபாய்
ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெற்றி பெறும் அணி ரூ.30.77 கோடியை தட்டிச் செல்லும்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 11-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அணி மோத உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான பரிசுத் தொகையை ஐசிசி இருமடங்காக உயர்த்தியுள்ளது.
கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ.15.38 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இம்முறை பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.30.77 கோடி வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வியை சந்திக்கும் அணி ரூ.17.95 கோடியை பெறும். கடந்த முறை 2-வது இடம் பிடித்த அணி ரூ.6.83 கோடியை மட்டுமே பெற்றிருந்தது.