மும்பை
ஆடுகளத்தில் வித்தியாசமாக செயல்பட்டு கோமாளியாக இருக்க விரும்பவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரா ஜஸ்பிரீத் பும்ரா பேசும்போது, “ களத்தில் நானும் தவறாக நடந்துகொண்டிருக்கிறேன். சவாலான போட்டிகளை விளையாடி வெல்ல நினைக்கிறேன். ஆனால் எல்லையை தாண்டாமல் விளையாட நினைக்கிறேன். அனைவரும் வித்தியாசமாக விளையாடுவார்கள்.
தொடக்கத்தில் எனக்கு பயிற்சியாளர்கள் இல்லாததால் தொலைக்காட்சி பார்த்துதான் கற்றுக்கொண்டேன். வார்த்தைகள், உடல் ரீதியாக எதிரணியை காயப்படுத்தும் பந்துவீச்சாளர்களை போலவே நானும் சிலமுறை முயற்சித்து இருக்கிறேன். எனக்கு அது ஒத்துவரவில்லை.
கோபமடைந்தால் சரியாக பந்துவீச முடியாது. அதனால், எனது கோபத்தைக் கட்டுப்படுத்தி பந்துவீச்சில் கவனம் செலுத்தினேன். நமது சிறந்த செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்தான் ஆனால், அதற்காக ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை” என்றார்.