மும்பை
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமான ரிஸ்ட் ஸ்பின்னரான 24 வயது விக்னேஷ் புதூர், அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ருதுராஜ் கெய்க்ட்வாட், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகியோரை அவுட்டாக்கி அசத்தினார். அவரது பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கில் திருப்புமுனையை ஏற்படுத்துவது போன்று இருந்தது. இம்பாக்ட் பிளேயரா களமிறங்கி உண்மையிலேயே தாக்கத்தை ஏற்படுத்திய விக்னேஷ் 4 ஓவர்களை வீசி 32 ரன்களை வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற நிலையில் போட்டி முடிவடைந்ததும் சிஎஸ்கேவின் ஆயுட்கால நட்சத்திரமான தோனி, விக்னேஷை தட்டிக்கொடுத்து பாராட்டினார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் புதூர், எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்று வருகிறார். இவரது தந்தை சுனில் குமார் ஆட்டோ ஒட்டுநராக உள்ளார். தாய் பிந்து இல்லத்தரசியாக உள்ளார்.
இதுவரை விக்னேஷ் புதூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது இல்லை. கேரளா கிரிக்கெட் லீக், தமிழ்நாடு பிரீமியர் லீக் ஆகியவற்றில் விளையாடி உள்ளார். சென்னையில் உள்ள பிரதான கிளப் ஒன்றிலும் விக்னேஷ் முக்கிய வீரராக உள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் விளையாடாத போதிலும் மும்பை இந்தியன்ஸ் திறமை கண்டறியும் குழுவினர் விக்னேஷ் அடையாளம் கண்டு இந்த சீசனுக்கு கொண்டு வந்துள்ளனர்.
மெகா ஏலத்திற்கு முன்னதாக நவம்பரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தேர்வு சோதனைகளில் விக்னேஷ் புதூர் கலந்து கொண்டார். இதில் Talent Scout டீமை கவர்ந்த அவர், ஏலத்தின் போது ரூ.30 லட்சத்திற்கு அடிப்படை விலைக்கு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ டி 20 தொடரில் எம்ஐ கேப் டவுன் அணியுடன் இருக்க அனுப்பப்பட்டார்.

அவர், எம்ஐ கேப்டவுன் கேப்டன் ரஷீத் கானுடன் வலைப்பயிற்சியில் சுமார் ஒரு மாதம் செலவிட்டார், அதே நேரத்தில் பந்துவீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்காவும் இளம் சுழற்பந்து வீச்சாளர் மீது ஒரு கண் வைத்திருந்தார், இருவரும் ஒரு பிணைப்பை வளர்த்துக் கொண்டனர். நன்கு கூர்தீட்டப்பட்ட விக்னேஷ் தற்போது பெரிய மேடையில் முதல் ஆட்டத்திலேயே அணி நிர்வாகம் தன்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறும்போது, “ரோஹித் சர்மா, திலக் வர்மா உள்ளிட்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் பயிற்சியில் விக்னேஷை எதிர்கொண்டுள்ளனர். அவரை எதிர்கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை என அவர்கள் தெரிவித்தனர். இந்த நம்பிக்கையிலேயே சிஎஸ்கேவுக்கு எதிராக விக்னேஷ் புதூரை களமிறக்கினோம்.
அவர், சீராக பந்தை சுழற்றுகிறார், நாங்கள் விரும்பிய பகுதிகளில் பந்தை தரையிறக்குகிறார். அவர் அதை மிகவும் துல்லியமாக செய்கிறார். இதைத்தான் நாங்கள் கவனிக்கிறோம்.
சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் ஆட்டம் ஒருபோதும் எளிதானது அல்ல. இது ஒரு பெரிய ஆட்டம். ஆனால் அவர் பதிலளித்த விதம் அருமையாக இருந்தது. அழுத்தமான சூழ்நிலையை சரியாக கையாண்டார். அவரது செயல் திறனாலேயே ஆட்டத்தில் நாங்கள் இருக்க முடிந்தது. விக்னேஷின் செயல் திறன் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்டோர் கூட மும்பை இந்தியன்ஸ் அணியின் Talent Scout குழுவினரால் தேடப்பட்டு கொண்டுவரப்பட்டவர்கள்தான். அவர்கள் மும்பை அணிக்காக விளையாடி அங்கிருந்து தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக மாறி உள்ளனர். விக்னேஷ் புதூர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவரும் ஒருநாள் இந்திய அணியின் ஸ்டார் வீரராக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு தூரம் நீண்டநெடியது.