சென்னை
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 5) பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தடுமாறி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், புத்துயிர் பெற்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது.
5 முறை சாம்பியனான சிஎஸ்கே இம்முறை தொடக்கத்திலேயே தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய நிலையில் அடுத்த இரு ஆட்டங்களிலும் பெங்களூரு, ராஜஸ்தானிடம் தோல்வி கண்டிருந்தது. அதேவேளையில் டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்கில் பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான நூர் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் குல்தீப் யாதவ் நடப்பு சீசனில் ஓவருக்கு சராசரியாக 5.25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவர், சென்னை அணியின் நடுவரிசை பேட்டிங்கிற்கு சவால் அளிக்கக்கூடும். அதேவேளையில் சிஎஸ்கேவின் நூர் அகமது ஓவருக்கு சராசரியாக 6.83 ரன்களை வழங்கிய நிலையில் 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். நடுஓவர்களில் அவர், பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பதில் அபாயகரமான வீரராக திகழ்ந்து வருகிறார்.