அகமதாபாத்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. அபிஷேக் போரெல் 18, கருண் நாயர் 31, கே.எல்.ராகுல் 28, அக்சர் படேல் 39, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31, அஷுதோஷ் சர்மா 37 ரன்கள் சேர்த்தனர்.
204 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. ஜாஸ்பட்லர் 54 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். சாய் சுதர்சன் 21 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 36 ரன்களும், ஷெர்பேன் ரூதர்போர்டு 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்களும் விளாசினர்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்காக அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.