லக்னோ
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 45 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்களும், ஆயுஷ் பதோனி 34 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் விளாசினர்.
ராஜஸ்தான் தரப்பில் வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 181 ரன்கள் இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியில் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, இம்பேக்ட் பிளேயர் விதியின் கீழ் தொடக்க வீரராக களமிறங்கி 20 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் அறிமுகம் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பல்வேறு தரப்பில் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இன்று நான் அதிகாலை எழுந்து 8-வது படிக்கும் சிறுவன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதைப் பார்த்தேன். என்ன மாதிரியான அறிமுகம் இது” என பதிவிட்டுள்ளார். சுந்தர் பிச்சையின் பதிவு வைரலாகி வருகிறது.