புதுடெல்லி
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், இவர்களின் ஓய்வு இந்திய அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் நேற்று டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, “ஒருவர் எப்போது கிரிக்கெட் பயணத்தை தொடங்க வேண்டும், எப்போது முடிக்க வேண்டும் என்பது அந்த நபரின் தனிப்பட்ட முடிவு என நினைக்கிறேன். அதனை முடிவு செய்வதற்கு வேறு யாருக்கும் உரிமையில்லை.
பயிற்சியாளர், அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள், இந்திய நாட்டில் யாராக இருந்தாலும் வீரர் ஒருவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் அல்லது எப்போது ஓய்வு பெறக் கூடாது எனக் கூறுவதற்கு உரிமையில்லை. அந்த முடிவை சம்பந்தப்பட்ட வீரர் அவராக எடுக்க வேண்டும்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இல்லாமல் விளையாட உள்ளோம். மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் இடத்தையும் நிரப்புவது மிகவும் கடினம்.
ஆனால், சீனியர் வீரர்களின் ஓய்வை மற்ற வீரர்கள் தங்களது கிடைத்திருக்கும் வாய்ப்பாக நினைத்து அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். சாம்பியன்ஸ் டிராபியின்போதும் இதனையே கூறினேன். அப்போது மூத்த வீரரான ஜஸ்பிரீத் பும்ரா அணியில் இல்லை. அவர் இல்லாதது மற்ற வீரர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு எனக் கூறினேன்”என்றார்.