பாரிஸ்
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் இரட்டையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, செக் குடியரசின் ஆதம் பாவ்லாசக் ஜோடி ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ், அர்ஜெண்டினாவின் ஹொராசியோ ஜெபலோஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் போபண்ணா ஜோடி 2-6, 6-7(5) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொரில் இருந்து வெளியேறியது.
மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 13-ம் நிலை வீராங்கனையான உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விட்டோலினா 4-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலியை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்விட்டோலினா 4-6, 7-6 (6), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் பிரிவு 4-வது சுற்றில் அமெரிக்க வீரர் டாமி பால் 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாப்பிரின்னை தோற்கடித்தார்.