ஐபிஎல் தொடரில் நேற்றுமுன்தினம் முலான்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. 220 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
எனினும் கடைசி வரை வெற்றிக்காக சிஸ்கே போராடிய விதம் பாராட்டும் வகையில் இருந்தது. நடப்பு சீசனில் சிஎஸ்கேவின் 4-வது தோல்வியாக இது அமைந்தது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் ருதுதுராஜ் கெய்க்வாட் கூறும்போது, “கடந்த 4 ஆட்டங்களிலும் எங்களது பீல்டிங்கே வெற்றிக்கும் தோல்விக்குமான வித்தியாசமாக இருந்தது. இது விமர்சிக்கத்தக்கதாக இருந்து வருகிறது. நாங்கள் தவறவிட்ட கேட்ச்களால் பேட்ஸ்மேன் 15 முதல் 30 ரன்களை கூடுதலாக சேர்க்கிறார்கள்.
பீல்டிங்கை ரசித்து செய்ய வேண்டும் என்று போட்டிக்கு முன்பு பேசினேன். பதற்றமாக இருந்தால், கேட்ச்சை தவறவிடும் நிலை ஏற்படும். தனித்துவமான பீல்டராக இருந்தால் இரண்டு, மூன்று ரன்கள் எடுப்பதை தடுத்து ரன் அவுட் செய்யலாம். அது அணிக்கு உதவும்” என்றார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மொத்தம் 9 கேட்ச்கள் தறவிடப்பட்டது. இதில் சிஎஸ்கே மட்டும் 4 கேட்ச்களை கோட்டைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் சதம் விளாசிய பிரியன்ஷு ஆர்யாவுக்கு 2 கேட்ச்சையும், அரை சதம் விளாசிய ஷஷாங் சிங்குக்கு ஒரு கேட்ச்சையும் தவறவிட்டனர் சிஎஸ்கே வீரர்கள்.