சென்னை
சென்னையில் நடைபெற்ற விழாவில் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் ரூ.7 லட்சத்தை சென்னை சூப்பர்கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே வழங்கினார்.
தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையாளர்கள் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) மற்றும் சிஎஸ்கே சார்பில் வளர்ந்து வரும் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக சிஎஸ்கே அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஷிவம் துபே பங்கேற்றார்.
அவருடன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவிச் செயலர் ஆர்.என்.பாபா, முன்னாள் இந்திய அணி வீரர் ராபின் சிங், எம்ஆர்எஃப் பேஸ் பவுண்டேஷன் தலைமை பயிற்சியாளர் எம். செந்தில்நாதன், ஹாக்கி அணியின் கேப்டன்கள் பாஸ்கரன், முகமது ரியாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய ஒலிம்பிக் சாம்பியன் பாஸ்கரன், இளம் வீரர், வீராங்கனைகளின் திறனை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது சிறப்பான விஷயம். எனினும் இந்த உதவித் தொகையை ரூ.30 ஆயிரத்தில் இருந்து உயர்த்தி வழங்க சிஎஸ்கே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன், “கிரிக்கெட்டை மட்டுமல்ல, பிற விளையாட்டுகளையும் ஊக்குவிக்கவும், உதவவும் சிஎஸ்கே உறுதிபூண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். பாஸ்கரனின் கோரிக்கையை என்.ஸ்ரீனிவாசனுக்கு அனுப்புகிறேன்” என்றார்.
இதற்கிடையே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவம் துபே தாமாகவே முன்வந்து 10 வீரர், வீராங்கனைகளுக்கும் தலா ரூ.70 ஆயிரம் வழங்குவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரது அறிவிப்பு இளம் வீரர், வீராங்கனைகளை மகிழ்ச்சி அடைய வைத்தது.
விழாவில் சிஎஸ்கே சார்பில் ரூ.3 லட்சமும், ஷிவம் துபே சார்பில் ரூ.7 லட்சமும் என மொத்தம் ரூ.10 லட்சம் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகையாக வழங்கப்பட்டது.
பி.பி.அபிநந்த் (டேபிள் டென்னிஸ்), கே.எஸ்.வெனிசா ஸ்ரீ (வில்வித்தை), முத்துமீனா வெள்ளசாமி(பாரா தடகளம்), ஷமீனா ரியாஸ்(ஸ்குவாஷ்), எஸ்.நந்தனா (கிரிக்கெட்), பி.கமலி (அலைச்சறுக்கு), ஆர்.அபிநயா(தடகளம்), ஆர்.சி.ஜிதின் அர்ஜுனன்(தடகளம்), ஏ.தக்சந்த் (செஸ்), ஆர்.கே.ஜெயந்த் (கிரிக்கெட்) ஆகியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொண்டனர்.