பாரிஸ்
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 2ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃபுடன் மோதினார்.
இதில் முதல் செட் கடும் போராட்டமாக இருந்தது. டைபிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை அரினா சபலெங்கா 7-6 (7-5) என கைப்பற்றினார். 2-வது செட்டில் பதிலடி கொடுத்த கோ கோ காஃப் 6-2 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார்.
இதனால் வெற்றியை தீர்மானித்த 3-வது செட் ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் கடும் சவால் கொடுத்த கோ கோ காஃப் 6-4 என இந்த செட்டை கைப்பற்றினார். முடிவில் 2 மணி நேரம் 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோ கோ காஃப் 6-7 (5-7), 6-2, 6-4 என் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்சு ஓபனில் கோ கோ காஃப் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் அவர், கடந்த 2022-ம் ஆண்டு 2-வது இடம் பிடித்திருந்தார். ஒட்டுமொத்தமாக கோ கோ காஃப் கைப்பற்றியுள்ள 2-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். கடந்த 2023-ம் ஆண்டில் அமெரிக்க ஓபனிலும் அவர், பட்டம் வென்றிருந்தார்.