மும்பை
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதற்காக இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது. இதையொட்டி மும்பையில் நேற்று கேப்டன் ஷுப்மன் கில்லும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது கவுதம் கம்பீர் கூறும்போது,“ ஆட்டத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் நான் எப்போதும் அழுத்தத்திலேயே இருக்கிறேன்.
நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களுக்குப் பிறகு நான் அழுத்தத்தில் இருந்தேன், சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகும் அதே அழுத்தத்தை உணர்ந்தேன்.
கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள் இருப்பது எப்போதும் சிறந்தது. கருண் நாயர் இந்தியா-ஏ அணிக்காக இரட்டை சதம் அடித்துள்ளார். ஒன்றிரண்டு போட்டிகளை வைத்து நாங்கள் அவரை மதிப்பிட மாட்டோம்.
அணிக்கு நல்லது செய்ய மற்றொரு வாய்ப்பு வீரர்களுக்கு கிடைத்துள்ளது. நாங்கள் நல்ல இடத்தில் இருக்கிறோம், முக்கியமான சுற்றுப்பயணத்திற்கு எங்களிடம் தரமான வீரர்கள் உள்ளனர்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நிலைமை கருத்தில் கொண்டு வெற்றியை தேடிதரக்கூடிய சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்வோம். ஜஸ்பிரித் பும்ரா எந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை” என்றார்.