புதுடெல்லி
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பில் உள்ள 25 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பிசிசிஐ சார்பில் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, மெய்நிகரில் பங்கேற்றார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வட்டாரங்கள் கூறுகையில், “பிசிசிஐ ஆசிய கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும். இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட வாய்ப்புள்ளது. போட்டி அட்டவணை குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன” என தெரிவித்தன.
ஆசிய கோப்பை டி 20 தொடர் செப்டம்பர் மாதத்தில் இரு வார காலங்கள் நடைபெறக்கூடும். இந்தத் தொடர் செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ள இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நிறைவடையும் என தெரிகிறது.

