மும்பை
இந்தியா ’ஏ‘ கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி வரும் 30-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை கேன்டர்பரியில் நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது போட்டி ஜூன் 6 முதல் 9-ம் தேதி வரை நார்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அபிமன்யூ ஈஸ்வரன் கேப்டனாக அறிவிக்கப்பட்டள்ளார். இவர், 2024-25-ம் ஆண்டு பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் 2-வது போட்டிக்கான அணியுடன் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், நித்திஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் தீப், சர்பராஸ் கான், ஹர்ஷித் ராணா, தனுஷ் கோட்டியன் ஆகியோரும் இந்தியா ‘ஏ’ அணியில் இடம் பெற்றுள்ளனர். ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய கருண் நாயருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று ரஞ்சி கோப்பையில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபேவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு முதல்தர போட்டியை தொடர்ந்து இந்திய அணிக்குள்ளேயே நடைபெறும் பயிற்சி ஆட்டத்திலும் இந்தியா ‘ஏ’ அணியைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த இன்ட்ராஸ்குவாடு பயிற்சி ஆட்டம் வரும் ஜூன் 13-ம் தேதி பெக்கன்ஹாமில் நடைபெறுகிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ‘ஏ’ அணி:
அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஷ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே.