ஜோகன்னஸ்பர்க்
இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி பாதியில் நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் வரும் 17-ம் தேதி மீண்டும் தொடங்கும் என பிசிசிஐ கடந்த 12-ம் தேதி அறிவித்தது.
திருத்தியமைக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையின்படி லீக் ஆட்டங்கள் வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்று 29, 30 மற்றும் ஜூன் 1-ம் தேதியும் இறுதிப் போட்டி 3-ம் தேதியும் நடைபெறுகின்றன.
இதனால் வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ள வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் திருப்பி அனுப்ப நடடிவக்கை எடுக்கும்படி ஐபிஎல் அணிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையானது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.
சிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வரும் ஜூன் 11-ம் தேதி லண்டனில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் தென் ஆப்பிரிக்க அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடும் காகிசோ ரபாடா (குஜராத் டைட்டன்ஸ்), லுங்கி நிகிடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (டெல்லி கேபிடல்ஸ்), எய்டன் மார்க்ரம் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்), ரியான் ரிக்கல்டன் (மும்பை இந்தியன்ஸ்), கார்பின் போஷ் (மும்பை இந்தியன்ஸ்), மார்கோ யான்சன் (பஞ்சாப் கிங்ஸ்), வியான் முல்டர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) ஆகிய 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே வெளிநாட்டு வீரர்கள் திரும்பவரவில்லை என்றால் அவர்களுக்கு மாற்றாக தற்காலிகமாக வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்ள ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கி உள்ளது. எனினும் இந்த வீரர்களை அடுத்த சீசனுக்கு தக்கவைத்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளது.