ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி உள்ள வங்கதேச அணி பெரும் வருவாய் இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் பங்கேற்பு தொகையாக சுமார் ரூ.4.50 கோடியை ஐசிசி வழங்கும். இந்த தொகை வங்கதேசத்துக்கு கிடைக்காது. இதைவிட அந்த அந்நாட்டு வாரியம் ஐசிசி-யின் ஆண்டு வருமான பகிர்வில் பெரிய தொகை இழக்கக்கூடும்.
ஐ.சி.சி.யிடமிருந்து அதன் வருவாயில் ஒரு பங்காக வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சுமார் ரூ.250 கோடியை பெறுகிறது. இது வங்கதேச வாரியத்தின் ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 60 சதவீதமாகும். மேலும், போட்டியில் விளையாடாததால் ஸ்பான்சர்ஷிப் பணத்தையும் இழக்க நேரிடும்.
மேலும் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக இருதரப்பு தொடரில் விளையாடுவதற்காக பயணம் செய்யாததால், வங்கதேச வாரியம் மற்ற நாடுகளுக்கு எதிராக 10 இருதரப்புத் தொடர்களை விளையாடுவதற்குச் சமமான பணத்தை இழக்கும்.

