ரோம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, 8-ம் நிலை வீராங்கனையான சீனாவின் செங் கின்வென்னுடன் மோதினார்.
இதில் செங் கின்வென் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அரினா சபலென்காவை தோற்கடித்தார். அரை இறுதி சுற்றில் செங் கின்வென், 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃபுடன் மோதுகிறார். கோ கோ காஃப் கால் இறுதி சுற்றில் 7-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவை தோற்கடித்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 5-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ஜேக் டிராப்பரை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அதேவேளையில் 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ் 6-7 (1-7), 4-6 என்ற செட் கணக்கில் 8-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரேன்ஸோ முசெட்டியிடம் தோல்வி அடைந்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.