சென்னை
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து சமீபத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணிக்கு ஷுப்மன் கில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக விருப்பம் உள்ளதாக சீனியர் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளர்.
இதுதொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் நடத்தி வரும் யூடியூப் சானல் நேர்காணலில் ரவீந்திர ஜடேஜா பேசியதாவது:
நிச்சயமான எனக்கும் டெஸ்ட்டில் கேப்டனாக வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக நான் பல கேப்டன்கள் தலைமையின் கீழ் விளையாடியுள்ளேன்.
நான் விளையாடிய கேப்டன்களின் ஒவ்வொருவரின் மனநிலை குறித்தும் எனக்கு நன்றாகத் தெரியும். வீரர்களுக்கு என்ன தேவை என்பதும் எனக்கு புரியும். ஒவ்வொரு கேப்டனுக்கும் அந்த அணியை வழிநடத்துவதில் வெவ்வேறு மாதிரியான அணுகுமுறைகள் இருக்கும்.
நான் தோனி தலைமையில் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறேன். அவருடைய சிந்தனைகள் மிகவும் எளிமையாக இருக்கும்.
ஒரு பேட்ஸ்மேன் குறிப்பிட்ட ஷாட்டினை அடிப்பார் என உணர்ந்தால் அந்தப் பகுதியில் ஃபீல்டர்களை நிறுத்தி பேட்டரை அசவுகரியத்து உள்ளாக்குவார் தோனி.
டி 20, ஐபிஎல் போட்டிகளில் அனைத்து பந்துகளுமே முக்கியமானது. ஆனால் டெஸ்ட் போட்டிகள் அதுபோன்று கிடையாது. அனைத்து பந்துகளுக்கும் ஃபீல்டிங்கை மாற்றி அமைக்க தேவையில்லை.
டெஸ்ட்டில் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ப 2, 3 பீல்டர்களை மாற்றினாலே போதும். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் தகுந்தபடி மாற்றத்தேவையில்லை. இது எளிதானதுதான். ஆனால் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.