லக்னோ
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 232 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டன. இதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு ரூ.24 லட்சமும், ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ரூ.12 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு அணி 2-வது முறையாக இந்த குற்றச்சாட்டில் சிக்கி உள்ளது. மேலும் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பொறுப்பு கேப்டனாக ஜிதேஷ் சர்மா செயல்பட்டிருந்தார். ஆனால் ஐபிஎல் விதிகளின்படி கேப்டனுக்கே அபராதம் விதிக்கப்படும். இதே பாணியில் ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
2-வது முறையாக பெங்களூரு அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் விளையாடும் லெவனில் இடம் பெற்ற அனைத்து வீரர்களுக்கும் தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டியின் ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த தொகை குறைவாக இருக்கிறதோ அதை வீரர்கள் செலுத்த வேண்டும்.