Tom Moody

பவுலிங்கால் லக்னோ மண்ணை கவ்வியது: டாம் மூடி விளாசல்

ஹைதராபாத்

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. 205 ரன்களை குவித்த போதிலும் பலவீனமான பந்துவீச்சால் லக்னோ அணியால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது.

இந்த சீசனுக்காக ரிஷப் பந்த்தை லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதேவேளையில் நிகோலஸ் பூரனை ரூ.21 கோடிக்குத் தக்க வைத்தது. இவர்கள் இருவருக்கு மட்டுமே ரூ.48 கோடியை செலவழித்தது லக்னோ அணி நிர்வாகம். இதன் காரணமாகவே வலுவான பந்துவீச்சு துறையை லக்னோ அணியால் கட்டமைக்க முடியாமல் போனதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டாம் மூடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், கிரிக்கெட் விவாத நிகழ்ச்சியில் பேசும்போது, “ரிஷப் பந்த் மற்றும் நிகோலஸ் பூரனுக்காக செலவிட்ட மிகப் பெரிய தொகையினால் நல்ல வீச்சு குழுவை லக்னோ அணியால் கட்டமைக்க முடியாமல் போய்விட்டது. ஏலத்தில் மற்ற பந்துவீச்சாளர்கள எடுக்க போதிய நிதி ஆதாரம் இல்லாமல் போனது.

lsg 20a

நிகோலஸ் பூரன், டேவிட் மில்லர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் ஆகியோர் ஓர் அணியில் இருப்பது சிறப்பான விஷயம்தான். இவர்கள் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பேட்ஸ்மேன்கள். ஆனால் போட்டியின் தினத்தில் பந்துவீச்சும் இருக்க வேண்டும். பவர் பிளேயில் தாக்கம் செலுத்தும் பந்துவீச்சாளர்கள் தேவை.

நடு ஓவர்களில் தகவமைப்புத் திறன் கொண்டவராகவும், விக்கெட்டுகளை வீழ்த்துபவராகவும், எதிரணியை நசுக்குபவராகவும் பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும்.

மேலும் இன்னிங்ஸின் இறுதிப்பகுதியில், அழுத்தத்தின் கீழ் ஆட்டத்தை முடிக்கக்கூடிய வகையில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். எதிரணி உங்களுக்கு எதிராக கடுமையாகப் போராடும்போது மிகவும் சவாலான ஓவர்களை வீச வேண்டும். ஆனால் இவை எதுவும் லக்னோ அணியிடம் இல்லை” என்றார்.

லக்னோ அணியில் இம்முறை பிரதான பந்துவீச்சாளர்களான மோஷின் கான், மயங்க் யாதவ் காயத்தில் சிக்கினர். இதில் மோஷின் கான் தொடரில் இருந்து முழுமையாக விலகினார். மயங்க் யாதவ் பிற்பகுதியில் அணிக்கு திரும்பினார். ஆனால் அவரால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அவேஷ் கான், ஆகாஷ் தீப் சிங் ஆகியோர் முழு உடற்தகுதியுடன் இல்லை.

இது அவர்களது செயல்திறனை வெகுவாக பாதித்தது. மோஷின் கானுக்கு மாற்று வீரராக கொண்டுவரப்பட்ட ஷர்துல் தாக்குர் ஒரு சில ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அதன் பின்னர் அவரிடம் இருந்து வெற்றிக்கான பங்களிப்பு வெளிப்படவில்லை. ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் என்ன வென்றால் திக்வேஷ் ராதியின் சுழற்பந்துவீச்சு மட்டுமே. நடப்பு சீசனில் 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், ஓவருக்கு சராசரியாக 8.18 ரன்களை மட்டுமே வழங்கிய நிலையில் 14 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோய் ஒரு சில ஆட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் அவரிடம் இருந்து தொடர்ச்சியான செயல் திறன் வெளிப்படவில்லை. 11 ஆட்டங்களில் விளையாடிய அவர், 9 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். ஓவருக்கு சராசரியாக 10.83 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top