லக்னோ
ஐபிஎல் தொடர் அடுத்த ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் பணியை அணிகள் தொடங்கியுள்ளன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் துல்லியத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஐபிஎல் தொடரை ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக பிசிசிஐ நிறுத்தி வைத்துள்ளது. இதனால், ஐபிஎல் தொடரில் லக்னோவில் இன்று (மே 9) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி நடைபெறவில்லை.
இதைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடருக்காக ரசிகர்களிடம் பெற்ற டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் பணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக லக்னோ அணி நிர்வாகம் அதன் இன்ஸ்டாகிராம் பதிவில்,“எக்னா திடலில் இன்று நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிக்காக ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் பணிகள் தொடங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.