புதுடெல்லி
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்பரல் 27) டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 8 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் சேர்த்தனர். அபிஷேக் போரெல் 28, டு பிளெஸ்ஸிஸ் 22 ரன்கள் சேர்த்தனர். ஆர்சிபி அணி சார்பில் புவேன்ஷ்வர் குமார் 3, ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
163 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்சிபி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புப்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிருணல் பாண்டியா 47 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன 73 ரன்களும், விராட் கோலி 47 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன 51 ரன்களும் விளாசினர். டிம் டேவிட் 5 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார்.
இந்த ஆட்டம் முடிவடைந்ததும் ஆர்சிபி நட்சத்திரமான விராட் கோலி, கே.எல்.ராகுலை கலாய்த்தார். கடந்த 10ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணியை டெல்லி கேப்பிடல்ஸ் வீழ்த்தியிருந்தது. இந்த ஆடத்தில் டெல்லி அணியின் நட்சத்திரம் கே.எல்.ராகுல் 93 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். அந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் வெற்றியை ‘காந்தாரா’ பட ஸ்டைலில் பேட்டை தரையில் ஓங்கி நிறுத்தி கொண்டாடினார்.
இந்நிலையில் இதை நேற்று டெல்லியில் நடைபெற்ற ஆட்டம் முடிவடைந்ததும் தனது சக அணி வீரர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த கே.எல்.ராகுல் அருகே சென்ற விராட் கோலி கையில் பேட் இல்லாமல் ‘காந்தாரா’ ஸ்டைல் போன்று செய்து கலாய்ததார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.