ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), நடப்பு சீசனில் வெற்றி பெறுவதற்கு தடுமாறி வருகிறது. 8 ஆட்டங்களில் விளையாடிய உள்ள சிஎஸ்கே 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது.
5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 10-வது இடத்தில் இருப்பது ரசிகர்களின் மனதை நொறுங்க செய்துள்ளது. இது ஒருபுறம் இருக்க சிஎஸ்கே மீது விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடைசியாக மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி சிஎஸ்கே அணியின் அழுத்தத்தை அதிகரிக்க செய்துள்ளது. அந்த ஆட்டத்தில் 177 ரன்கள் இலக்கை மும்பை அணி 15.2 ஓவர்களிலேயே விரட்டி வெற்றி கண்டிருந்தது.
இது சிஎஸ்கேவின் நிகர ரன் ரேட்டை கடுமையாக பாதித்துள்ளது. இதற்கெல்லாம் அணியின் பார்ம் மற்றும் வியூகம் சரியில்லாததே காரணம் என்ற குற்றட்சாட்டுகள் மேலோங்கியுள்ளன.
இந்நிலையில் சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறும்போது, “நாங்கள் இந்தமுறை சரியாக விளையாடவில்லை. நன்றாக விளையாட முயற்சிக்கிறோம். அடுத்த சில போட்டிகளில் நன்றாக விளையாடுவோம்.
இது வெறுமனே போட்டிதான். நாங்கள் இன்னும் அவசர நிலை பொத்தானை அழுத்தவில்லை. சிஎஸ்கே நிர்வாகம் அதுமாதிரியானதில்லை. ஒரு அணியாக அனைவரும் நன்றாக விளையாட வேண்டும். தோனி தலைமை ஏற்றதும் எதுவும் மாறவில்லை என அவரை மட்டும் குறைசொல்ல முடியாது.
அணிக்கு எது நல்லதோ அதைதான் தோனி செய்வார். நிர்வாகத்தினராக நாங்கள் சிஎஸ்கே அணியிடம் இருந்து சிறந்த விளையாட்டை எதிர்பார்க்கிறோம். அணியை விமர்சிப்பதில்லை” என்றார்.