ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லக்னோ அணியை 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 53, மிட்செல் மார்ஷ் 45 ரன்கள் எடுத்தனர்.
160 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான அபிஷேக் போரெல் 36 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசினார்.
மற்றொரு தொடக்க வீரரான கருண் நாயர் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர்கள் இருவரும் மார்க்ரம் பந்தில் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் கேப்டன் அக்சர் படேல் 20 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 51 ரன்கள் எடுத்திருந்த போது ஐபிஎல் தொடர்களில் 5 ஆயிரம் ரன்கள் மைல் கல்லை எட்டினார். 130 இன்னிங்ஸ்களில் அவர், இந்த மைல் கல் சாதனையை படைத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் விரைவாக 5 ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற வரலாற்று சாதனையையும் கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் டேவிட் வார்னர் 135 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் கே.எல்.ராகுல். இந்த போட்டி முடிவடைந்ததும் கே.எல்.ராகுல் தனது மட்டை வீச்சின் சில படங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு “லக்னோவுக்கு திரும்பி வருவது எப்போதும் சிறந்து” என தெரிவித்துள்ளார்.
கே.எல்.ராகுலின் இந்த பதிவு வைரலாகி உள்ளது. போட்டி முடிவடைந்ததும் லக்னோ அணியின் உரிமையளாரான கோயங்கா தனது மகனுடன் மைதானத்துக்குள் வந்தார். அப்போது கே.எல்.ராகுலுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கே.எல்.ராகுலை நிறுத்தி பேச முயன்றனர். ஆனால் அதை தவிர்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் கே.எல்.ராகுல்.
கடந்த 3 சீசன்களிலும் கே.எல்.ராகுல், லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தார். கடந்த வரும் ஒரு போட்டியின் போது கே.எல்.ராகுல் சரியாக விளையாடவில்லையென மைதானத்தில் வைத்தே அவரிடம் கடிந்து கொண்டார் கோயங்கா. இதன் காரணமாகவே அவர், லக்னோ அணியில் இருந்து விலகியிருந்தார்.