ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), நடப்பு சீசனில் வெற்றி பெறுவதற்கு தடுமாறி வருகிறது. 8 ஆட்டங்களில் விளையாடிய உள்ள சிஎஸ்கே 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 10-வது இடத்தில் இருப்பது ரசிகர்களின் மனதை நொறுங்க செய்துள்ளது. இது ஒருபுறம் இருக்க சிஎஸ்கே மீது விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடைசியாக மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி சிஎஸ்கே அணியின் அழுத்தத்தை அதிகரிக்க செய்துள்ளது. அந்த ஆட்டத்தில் 177 ரன்கள் இலக்கை மும்பை அணி 15.2 ஓவர்களிலேயே விரட்டி வெற்றி கண்டிருந்தது. இது சிஎஸ்கேவின் நிகர ரன் ரேட்டை கடுமையாக பாதித்துள்ளது. இதற்கெல்லாம் அணியின் பார்ம் மற்றும் வியூகம் சரியில்லாததே காரணம் என்ற குற்றட்சாட்டுகள் மேலோங்கியுள்ளன.
இந்த சவாலான கட்டத்திற்கு மத்தியில், சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் சென்னையில் நேற்று (ஏப்ரல் 22) நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் நிரூபர்கள் சங்க விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, “இந்த ஆண்டு சிஎஸ்கேவின் செயல்திறன் குறித்து நீங்கள் அனைவரும் கொஞ்சம் ஏமாற்றமடைந்துள்ளீர்கள் என்பது தெரியம். இதற்கு முன்னரும் எங்களுக்கு கடினமான சீசன்கள் இருந்தன. இந்த நேரத்தில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் வரவிருக்கும் போட்டிகளில் விஷயங்களை மாற்றுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்.
2010-ம் ஆண்டு நாங்கள் தொடர்ச்சியாக ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்தோம். ஆனால் அந்த தோல்விகளில் இருந்து மீண்டு வந்து கோப்பையை வென்றோம். நாங்கள் பட்டம் வென்ற முதல் வருடம் அதுதான். அணியில் உள்ள அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். அணியும் அர்ப்பணிப்புடன் உள்ளது. தோனி போன்ற ஒருவர் தலைமையில் இருப்பதால், நாங்கள் திரும்பி வருவதற்கு இன்னும் சிறிது நேரமே உள்ளது” என்றார்.