நாக்பூர்: நாக்பூரில் நடைபெற்று வந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விதர்பா அணி கோப்பையைக் கைப்பற்றியது.
நாக்பூரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டம் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்ஸில் விதர்பா 379 ரன்களும், கேரள அணி 342 ரன்களும் எடுத்தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணி 4-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தை விளையாடியது விதர்பா அணி. அந்த அணி, 9 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்திருந்தபோது கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 37 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் அந்த அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. 3-வது முறையாக ரஞ்சி கோப்பையை விதர்பா அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. விதர்பாவின் 2-வது இன்னிங்ஸில் கருண் நாயர் 135, டேனிஷ் மாலேவர் 73 ரன்கள் எடுத்தனர். ஆட்டநாயகனாக விதர்பா அணியின் டேனிஷ் மாலேவரும், தொடர்நாயகனாக ஹர்ஷ் துபேவும் தேர்வு செய்யப்பட்டனர்.