Shahid Afrid

பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியு-வில் உள்ளது : அப்ரிடி தாக்கு

கராச்சி : ஆல்ரவுண்டர் ஷதாப் கான் பாகிஸ்தான் டி 20 அணிக்கு திரும்புவது குறித்து  கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியு-வில் இருப்பதாக சாடியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 ஆட்டங்கள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. இதில் டி 20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷதப் கான் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் ஷதப் கானின் செயல் திறன் மோசமாக இருந்ததால் அவர், அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஷாகித் அப்ரிடி கூறியதாவது:

எதன் அடிப்படையில் ஷதப் கான் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் என்ன, எதற்காக அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எல்லா நேரத்திலும் நாம் போட்டிக்கு எப்படி தயாராகிறோம் என்பது பற்றி பேசுகிறோம், ஒரு பெரிய தொடரில் நாம் தோல்வியடையும் போது அறுவை சிகிச்சை பற்றி பேசுகிறோம். தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது என்பதே உண்மை.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதன் முடிவுகள் மற்றும் கொள்கைகளில் உறுதியாக இருப்பது இல்லை. கேப்டன்கள், பயிற்சியாளர்கள் அல்லது சில வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறோம். கிரிக்கெட் வாரிய அதிகாரிகளின் பொறுப்புதான் என்ன?. கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களின் தலைக்கு மேல் தொடர்ந்து வாள் தொங்கிக்கொண்டிருக்கும்போது நமது விளையாட்டு எப்படி முன்னேற முடியும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி நேர்மறையான மனிதர் என்றாலும், உண்மை என்னவென்றால் அவருக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாது. அவர், பாகிஸ்தானுக்காக சிறப்பாக செயல்பட விரும்புகிறார். ஆனால் இறுதியில் அவர் ஆலோசனையையே நம்பியிருக்கிறார். ஒரே நேரத்தில் மூன்று வேலைகளைத் தொடர முடியாது என்று நான் அவரிடம் கூறினேன். அவர் ஒரு வேலையில் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பது என்பது ஒரு முழுநேர வேலை.

இவ்வாறு ஷாகித் அப்ரிடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top